கோவையில் பள்ளிக் குழந்தைகள் இரண்டு பேர் கடத்தி, படுகொலை செய்யப்பட்ட
வழக்கில் , மனோகரன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மனோகரன் மீதான
குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவனை குற்றவாளி என அறிவித்த
நீதிபதி சுப்பிரமணியம் தண்டனை விபரம் வரும் ஒன்றாம் தேதி வெளியிடப்படும் என
தெரிவித்தார்.
கடந்த 2010 ஆண்டு கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த சிறுமி
முஸ்கான், சிறுவன் ரித்திக் ஆகியோர், வாடகைக் கார் ஓட்டுநர் மோகன் ராஜ்
என்பவரால் கடத்திப் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது உடல்கள் பொள்ளாச்சி
அருகே கண்டெடுக்கப்பட்டன. போலீஸ் விசாரணையில், சிறுமி பாலியல் பலாத்காரம்
செய்யப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுதும்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, மோகன்ராஜூம், அவரது நண்பர் மனோகரும் கைது செய்யப்பட்டனர்.
அக்காள், தம்பிகளான முஸ்கானும், ரித்திக்கும், அவர்களுக்கு நன்கு
அறிமுகமான ஓட்டுநர்களாலேயே கடத்திக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும்
பெற்றோர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் தப்பியோட முயன்ற
மோகன்ராஜ் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த வழக்கு கோவை
மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், 47 சாட்சிகள்
விசாரிக்கப்பட்டனர். 47 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையும் தாக்கல்
செய்யப்பட்டது.
இன்று கோவை மகளிர் நீதிமன்றத்தில், மனோகரன் ஆஜர் படுத்தப்பட்டன. மனோகரன்
மீது கடத்தல், கற்பழிப்பு, கொலை, தடையங்களை மறைத்தல் உள்ளிட்ட 6
பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
மேலும் சாட்சியங்கள் அனைத்தும் மனோகரன் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதை உறுதி
படுத்துவதாகவும் தெரிவித்தார். இதற்கு மனோகரன் எந்த ஆட்சேபனையும்
தெரிவிக்கவில்லை. பின்னர் நீதிபதி சுப்பிரமணியம், மனோகரன் குற்றவாளி என
தீர்ப்பு வழங்கியதோடு, தண்டனை வருகிற 1ம் தேதி வெளியிடப்படும் என
அறிவித்தார்.
2 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகள் படுகொலை செய்யப்பட்ட இதே நாளில், தீ்ர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.