வால்பாறையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி


       பொள்ளாச்சி அருகே வால்பாறை மலைப்பாதையில் 200 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 51 பேர் படுகாயமடைந்தனர்.
வால்பாறையில் இருந்து புறப்பட்ட இந்த பேருந்து, பழனி செல்வதற்காக, வால்பாறை மலைப்பாதை அருகே நேற்றிரவு 10 மணியளவில் வந்து கொண்டிருந்தது. பொள்ளாச்சி அருகே ஆழியார் மலைப்பாதையில் உள்ள மூன்றாவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது, பேருந்து ஓட்டுனரி்ன் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பை உடைத்துக் கொண்டு, 200 அடி பள்ளத்தில் விழுந்தது.
பள்ளத்தில் உருண்ட பேருந்து, அங்கிருந்த மரங்களில் சிக்கியது. பேருந்தில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாகச் சென்றவர்கள், போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து அங்கு வந்த, போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கயிற்றைக் கட்டி, பேருந்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள், இரண்டு பெண்கள் உள்பட 7 பேர் பலியானார்கள். படுகாயமடைந்த 51 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-பசுமை நாயகன்